திங்கள், 2 செப்டம்பர், 2013

சில்லென்ற காற்றில்...

சில்லென்ற காற்றும்
சல்லென்ற மழையுமாய்
சொல்லொனா இன்பம்
சொல்லாமல் எனை மீட்ட ...

பாய்ந்து வரும் நீராய்
பரவசமும் எனைக் கூட்ட ...

காற்றாய் உனை எண்ணி
நாற்றாய் உன்னோடு சாய...

புத்துணர்வின் இனிமை
புத்தியை கோளாராக்கு கிறதே.

மழை நாளில் ...

நாட்கள் நான்காயின
நனைந்த மாலையென ...
 
தொடர் மழையின் யுத்தமும்
சில்லென்ற காற்றின் முத்தமும்
கேட்கும் பாட்டின் சத்தமும்
 பரவசமாக்குகின்றது மனதை
பவித்ரமாக்குகிறது  காற்றை ...

மழைக்கு முன்பான
சுழிக்கும் காற்றோடு
என்மகளின்  ஓட்டத்தை
துரத்திப் பிடித்தேன்
தூறலின் துணையோடு..

கணவரோடு தேநீரும் ,
மகளோடு வாய்ப்பாட்டும் ,
வாய்ப்புகள்  நன்று
வசந்தத்தை உணர...

ஒன்றேகால் வயது மகளோ
இசைகேட்டு ஆடுகின்றாள்;

மழையாலே இத்தருணம்
ஆனது ஆனந்தம் .....


ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ...

அன்னமே நீயுறங்க
அன்னையிவள் பாடுகின்றேன்

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ...

தங்கமே நீயுறங்க
தமிழ்பாட்டு பாடுகின்றேன்

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ....

மங்காத என்நிலவே
மைவிழி மூடிநீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ ....

பொங்கிவரும் காவிரியே
பொன்விழி மூடிநீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ .....

புத்தம் புதுமலரே
பூவிழிமூடி நீயுறங்கு

ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரீராரோ.....

தாலாட்டு

ஆராரோ..ஆரீராரோ..

கண்ணே என் கண்மணியே...
கண்ணுறங்கு பூமணியே!

பொன்னே என் பொன்மயிலே...
நீயுறங்கு நவமணியே!

முத்தே என் முத்தழகே...
விழியுறங்கு என்மகளே!

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பாவேந்தர்

                               
                                       பாவேந்தர்



பாரதி தாசன்
பைந்தமிழ் நேசன்!
இயற்றிய கவிகள்
இயற்கையின்  அருவிகள் !
பாரதிக்கு மட்டுமல்ல
பழந்தமிழுக்கும்  தாசன்.

பூரிக்கும் மழலையைப்போல்
 புதுத்தமிழ்படைக்கும் ஆசான்.
புதுவைக்  கவிமயில்;

இளமைக் கவிகளின்
மனதில் வாழும்
அழகு ஆண்மயில் ;

புதுச்சேரி  வணிகர்
வழி உதித்த  தாசன்;
வீரத் தமிழ்த்தாய்
 பெற்றெடுத்தகவி  யரசன் !

         

வியாழன், 6 ஜூன், 2013

நான்.

எழுத மறுக்கும் என் பேனா
என் மனம்  பாரமானால்......

சிரிக்க மறுக்கும் என் உதடுகள்
என் சுயம் சிதைக்கப்பட்டால் .....

நினைக்க மறுக்கும் என் நெஞ்சம்
சோகம் எனும் மேகம் வந்தால்.....

பழக மறுக்கும் என் உள்ளம்
வேசமிட்ட  மோசமுகம் கண்டால்....

பேச மறுக்கும் என் வாய்
கோபமெனும் கேடுவந்தால் ....

உறங்க மறுக்கும் என் விழிகள்
உன்னதங்கள் உடைக்கப்பட்டால்.


சனி, 1 ஜூன், 2013

தாய்மை

உயிரில் கலந்து
உணர்வில் வளரும் உயிரே !
என்னுள் உந்தன் வரவு...
என்னுள் உந்தன்  துடிப்பு..
என்னுள் உந்தன் வளர்ச்சி ..

முதன் முதலாய்
ரசிக்க வைத்தது
உயிரோட்டமான அழகை
என்னோடு நானே !

அழகான மாலையிலே ..

ரம்மியமானஓர் மாலையில் ,
இரண்டு மைனாக்கள்
தத்திக் கொத்தி விளையாடியது
ஒன்று நீ , மற்றொன்று நான் ...



தென்னை மரமிரண்டு
காற்றில் கலந்து
அசைந்தாடிக் கொண்டிருந்தது
ஒன்று நீ, மற்றொன்று நான்...



மரத்தில் குயில்கள் ரெண்டு 
இசையில் சங்கமித்தது
ஒன்று நீ, மற்றொன்று நான்....



இவற்றைக் கண்டு
மேலே முழு நிலவு
முகம் காட்டிச் சிரித்தது -அதில்
பாதி நீ,  மீதி நான்.

வானம்

கறை பட்ட தரையாக  
       மழை கொண்ட வானம்!
கழுவி விட்ட தரையாக
      மழை நின்ற வானம் !

வியாழன், 30 மே, 2013